கனடாவில் ஆண்டுதோறும் 90,000 கார்கள் திருட்டு!

கனடாவில் கார் வாகன திருட்டுகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில் கார் உள்ளிட்ட திருடப்பட்ட வாகனங்களின் ஏற்றுமதியை சமாளிக்க அரசு 28 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.

இதற்கு காரணம், அங்கு ஆண்டுதோறும் 90,000 கார்கள் திருடப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியானதே ஆகும்.

இந்த நிலையில், வாகனத் திருட்டு குறித்து தேசிய உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கவலை தெரிவித்தார்.

மாநாட்டில் பேசிய அவர், ”கவர்ச்சிகரமான கோஷம் வாகனத் திருட்டை நிறுத்தாது; இரண்டு நிமிட யூடியூப் வீடியோ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை நிறுத்தாது.

வாகனத் திருட்டைத் தடுப்பது என்பது சட்ட அமலாக்கம், எல்லை சேவைகள், துறைமுக அதிகாரிகள், கார் தயாரிப்பாளர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பதாகும்” என்று கூறினார்.

திருடப்பட்ட வாகனங்கள் குறித்து அரசு கூறும்போது, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பெரும்பாலான திருடப்பட்ட ஆட்டோக்கள் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட்டவை என்றது.

அதேபோல் ஃபெடரல் அதிகாரிகள், திருடப்பட்ட சொத்துக்களை வைத்திருப்பது மற்றும் கடத்துவது, வாகன அடையாள எண்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட குற்றத்தின் பல்வேறு கட்டங்களில் வாகன திருட்டுக்கு தீர்வு காண கனடாவில் வலுவான சட்டங்கள் உள்ளன என தெரிவித்தனர்.

இதற்கிடையில் ட்ரூடோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வாகன திருட்டுகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. குற்றவாளிகள் மிகவும் வெட்கக் கேடானவர்களாகி வருகின்றனர். மேலும் திருடப்பட்ட கார்களுக்கான சர்வதேச கறுப்பு சந்தை வளர்ந்துள்ளது.

இந்த குற்றவாளிகளை தடுக்கவும், இந்த திருட்டுகள் நடக்காமல் தடுக்கவும், நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!