செங்கல்பட்டு அருகே பழமத்தூர் பகுதியில் அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிய கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தென் மாவட்டத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஒன்று, ஆம்னி பேருந்து மற்றும் அரசு பேருந்து மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்துகளில் பயணித்த 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து அறிந்தவுடன் நிகழ்விடத்துக்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் பலியானவர்களின் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின், போக்குவரத்து சீரானது.
இந்த விபத்தில் திருச்சியில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் ராஜேஷ் என்பவரும், அவரது சித்தியும் உயிரிழந்துள்ளனர். இதேபோல் பிரவீன் என்பவரும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், மற்றொருவரை அடையாளம் காணும் முயற்சியில் படாளம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.