மே 6ஆம் தேதி +2 தேர்வு முடிவுகள் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை

திட்டமிட்டபடி மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 3,302 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 ஆயிரத்து 534 பள்ளிகளில் படித்த 7 லட்சத்து 80 ஆயிரத்து 550 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 8 ஆயிரத்து 190 மாணவர்கள் என மொத்தம் 7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள், தமிழ்நாடு முழுவதும் 86 மையங்களில் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தன. இந்நிலையில், முன்பே திட்டமிட்டபடி, வரும் மே 6ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அரசு தேர்வுத்துறை தயாராக உள்ளது.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் வெளியிடுவதற்கு அனுமதி கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற்று வருவதால், தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நிறைவடைந்தாலும் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கின்றன. எனவே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு அனுமதி பெற வேண்டியுள்ளது.

தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரும் மே 6ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடுவார் எனவும், அனுமதி கிடைக்காவிட்டால் அரசுத் தேர்வுத்துறை இயக்குனர், பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!